Saturday, May 7, 2011

அன்னையர் தினம்


அன்னையர் தினம்.
அன்னையர் தினம் எனும் போதினிலே
பாசத்தின் சுவை ஊறுதென் உள்ளத்திலே
அழியா நினைவுகள் நெஞ்சினிலே
அன்னையைப் போற்றுது அனுதினமும் . .

அம்மா... இச்சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்களும், தொணிகளும் ஆயிரமாயிரம்... அம்மாக்களின் மேன்மையை எடுத்துரைக்காத எந்த மனிதருமே உலகத்தில் இருப்பாரென கூறமுடியாது. உலக அளவில் தாய்மையை போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் ஏனைய சர்வதேச தினங்களைப் போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படுவதில்லை. பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று உலகில் அநேக நாடுகள் கொண்டாடினாலும்கூட, வேறும் சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்போ கொண்டாடுகின்றன.

ஒரு பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக வீட்டிலுள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் 'அன்னை' என்ற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது. தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு. அத்தகைய தாயைப் போற்றவே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

            "தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை!!!"

'தாயிற்சிறந்த கோவிலுமில்லை....." என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை எடுத்துக்கூறத்தக்க வரிகளாகும். இந்த உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை.

ஏழைக்கும், பணக்காரனுக்கும் கடவுள் சமமாக கொடுத்த வரம்... அன்னை. அன்னையிடம் மட்டும் தான் பேதமில்லாத அன்பை காணமுடியும். ஒற்றைப் பிள்ளை பெற்றாலும், பத்துப் பிள்ளை இருந்தாலும், அங்கே அன்பு மாறுவதில்லை. கருவறையில் சுமக்கும் போதே, பிள்ளையின் கனவுகளையும் சுமந்து, காலம் முழுதும் பிள்ளைக்காகவே வாழும் உன்னத சொர்க்கம் அவள்.

குறள்:
தற்காத்துத், தற்கொண்டான் பேணித், தகைசான்ற
சொற்காத்துச், சோர்வுஇலாள் பெண்.

விளக்கம்: உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் செலுத்தி, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே பெண்.

அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment